தூத்துக்குடி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தொண்டரா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார்.
அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தொண்டரா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் தொண்டரைப் போன்று செயல்பட்டு வருகிறார். அவர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை மேற்கொள்ளலாம். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். இது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து குதர்க்கமான கருத்துகளை பேசி வருகிறார். தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான்.
இதையும் படிக்க | விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஒரு மணி நேரத்துக்கு ரூ.800 சம்பளத்தில் பயிற்றுநர்கள் பணி!
திமுக அரசின் கொள்கைக்கு எதிரானவர், திராவிட கோட்பாட்டிற்கு எதிரானவர் தமிழகத்தில் ஆளுநராக நீடிப்பதற்கு தகுதி இல்லை. இப்படிபட்ட ஒருவர் சட்டப்பேரவையில் நாளை உரையாற்றுவது எந்த வகையில் பொருத்தம். திராவிட மாடல் அரசின் கொள்கையை முன்னிறுத்தக்கூடிய உரையை ஆற்றுவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த வகையிலும் தகுதி படைத்தவர் அல்ல என்று கூறினார்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மனித மலத்தை கலந்த அநாகரீகத்தை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். முதல்வர் இதில் நேரடியாக தலையிட வேண்டும்.
அவர்களை கைது செய்யக்கோரி வருகிற ஜனவரி 11 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் கூறினார்.