பள்ளிக் கல்வியில் கலை, பண்பாடு ஒருங்கிணைப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்
பள்ளிக் கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், பள்ளி கல்வித் துறை சார்பில் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் அவர் பேசியதாவது, பள்ளிக் கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். நாளைய தமிழ்நாட்டை காக்கும் லட்சியவாதிகளாய் மாணவர்கள் இருக்க போகிறார்கள்.
எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்கள், அரசுப் பள்ளி மாணவர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் படித்து மருத்துவம் சேரும் மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், திறன் மிகு வகுப்பறைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் ஏற்படுத்தித் தரும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.