முகப்பு
தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய இளைஞர் பலி

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் ராஜன் என்ற இளைஞர் பலியானார்.

Updated On : 16 ஜனவரி, 2023 at 5:53 PM
பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய இளைஞர் பலி
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 5:17 PM


பாலமேடு: பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் ராஜன் என்ற இளைஞர் பலியானார்.

மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் மதுரையைச் சேர்ந்த அரவிந்த் ராஜன் என்பவர் மாடு பிடிக்கும் போட்டியில் களமிறங்கினார். இவர் ஆடுகளத்தில் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்பட்டதோடு 9 காளைகளை பிடித்து 3-வது இடத்தில் இருந்தார். 

இந்த நிலையில் பாய்ந்து வந்த காளை ஒன்றை மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் அடக்க பாய்ந்தார். அப்போது அவரது மார்பு பகுதியில் மாட்டின் கொம்பு குத்திக் கிழித்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அரவிந்த்ராஜன் உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அரவிந்த் ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். ஜல்லிக்கட்டுப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆர்வமுடைய அரவிந்த்ராஜ்

மதுரை பாலமேடு கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் - தெய்வானை தம்பதிக்கு இரண்டு மகன்கள்.  இவர்களின் முதல் மகன் நரேந்திர ராஜ், சென்னையில் தந்தை  ராஜேந்திரனுடன் கட்டட வேலை பார்த்து வருகிறார். இரண்டாவது மகனான அரவிந்தராஜ் (24) ஜல்லிக்கட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பீரோ, ஹெல்மெட், தங்கக்காசு உள்ளிட்ட பல பரிசுகளை வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று முதல் 3  சுற்றில் அரவிந்த் ராஜ் 9 காளைகளை அடக்கி,  மூன்றாவது சிறந்த வீரராக களம் ஆடிக் கொண்டிருந்தார்.
 
நான்காவது சுற்றில் ஜல்லிக்கட்டு காளையைப் அடக்க முயன்ற  போது மாடு வயிற்றில் ஆழமாக குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழந்தார். 

இதனை அடுத்து அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.