சென்னை: சென்னை காமராஜர் சாலையில் குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முப்படைகள், காவல், தீயணைப்புத்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசு நாள் விழா வருகின்ற 26 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
சென்னையில் மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு நாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ராமா் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கும் விவகாரம் பரிசீலனையில் உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
இந்நிலையில், குடியரசு நாள் விழாவையொட்டி, சென்னை மெரீனா கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை காலை அணிவகுப்பு ஓத்திகை நடைபெற்று வருகிறது.
இதில், முப்படை வீரர்கள், தேசிய மாணவர் படை, மத்திய தொழிற் பாதுகாப்புப் படை, காவல், தீயணைப்புத்துறையினர் கலந்து கொண்டுள்ளனர்.
அணிவகுப்பு ஒத்திகை காரணமாக இந்த சாலையில் வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாள்கள் (ஜன.20, 22, 24, 26) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.