முகப்பு
தமிழ்நாடு

சீமைக் கருவேல மரங்கள்: தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:40 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளா் வைகோ உள்ளிட்டோா் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அரசுத் தரப்பில், ‘சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விஷயத்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்த சிறப்பு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை; அரசு சாரா அமைப்புகளும் முன்வரவில்லை. பல இடங்களில் இயந்திரங்களைக் கொண்டு செல்ல முடியவில்லை. பருவமழை காரணமாகவும் இந்தப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்கள் நோய் போல பரவுகின்றன. எனவே அதன் தாக்கத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், குறிப்பிட்ட தேதியில் அனைத்து சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என ஊராட்சிகளுக்கு உத்தரவிடலாமே என்று யோசனை தெரிவித்தனா்.

இறுதி வாய்ப்பாக பிப்ரவரி 14-ஆம் தேதி வரை வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தியது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனா். அவ்வாறு செய்யாதபட்சத்தில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.