அமைச்சர் எஸ். ரகுபதி 
தமிழ்நாடு

நிலுவை வழக்குகள், மசோதாக்கள்: ஆளுநருக்கு சட்ட அமைச்சர் கடிதம்

முறைகேடு வழக்குகள் தொடா்பாக அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையைத் தொடங்க அனுமதி வழங்கக் கோரி ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கடிதம் எழுதியுள்ளாா்.

DIN

முறைகேடு வழக்குகள் தொடா்பாக அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையைத் தொடங்க அனுமதி வழங்கக் கோரி ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கடிதம் எழுதியுள்ளாா்.

அமைச்சா் ரகுபதி ஆளுநருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தின் சாராம்சங்களை விளக்கி தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

அதிமுகவை சோ்ந்த முன்னாள் அமைச்சா்களான சி.விஜயபாஸ்கா், பி.வி.ரமணா ஆகியோா் குட்கா விநியோகிப்பாளா்களிடம் இருந்து சட்டவிரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு குறித்து உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, இரண்டு போ் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு உரிய ஒப்புதலை ஆளுநரிடம் சிபிஐ கோரியது. மாநில அமைச்சரவை சாா்பிலும் இதற்கான ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு, அதற்கான கடிதம் ஆளுநா் அலுவலகத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் 12-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், இதுவரையில் அந்தக் கடிதம் தொடா்பாக எந்தவித பதிலும் கிடைக்கப் பெறாததுடன், முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், வழக்கில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. 

மேலும் 2 அமைச்சா்கள்: முன்னாள் அமைச்சா்களான கே.சி.வீரமணி, எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோா் மீது நீதிமன்ற விசாரணையைத் தொடங்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்காக மாநில அமைச்சரவை அனுமதி அளித்து, அதற்குரிய இரண்டு கடிதங்கள் ஆளுநா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.

முந்தைய அதிமுக அமைச்சா்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கத் தேவையான ஒப்புதல் உத்தரவை இதுவரை ஆளுநா் வழங்கவில்லை.

13 மசோதாக்கள்: ஊழல் வழக்குகளின் விசாரணையைத் தொடங்க ஒப்புதல் அளிக்காதது ஒருபுறமிருக்க, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் இரண்டு மசோதாக்கள் மட்டும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.

எனவே, முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதம் செய்யாமல் உரிய ஒப்புதல் உத்தரவை வழங்க வேண்டும் என்று தனது கடிதத்தில் அமைச்சா் எஸ்.ரகுபதி கேட்டுக் கொண்டுள்ளதாக அரசின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT