150 ஆண்டுகளுக்குப் பிறகு பூவரசன்குப்பத்தில் தேரோட்டம்!
லட்சுமி நரசிம்மப் பெருமாள் திருக்கோயிலில் சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் சனிக்கிழமை (ஜூலை 8) நடைபெற்றது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பத்திலுள்ள அருள்மிகு அமிர்தவல்லி நாயகி அம்மன் உடனுறை லட்சுமி நரசிம்மப் பெருமாள் திருக்கோயிலில் சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் சனிக்கிழமை (ஜூலை 8) நடைபெற்றது.
சப்தரிஷிகளுக்காக அமிர்தவல்லி தாயாருடன் சாந்த சொரூபியாக நரசிம்மர் காட்சியளித்த கோயில் தென் அஹோபிலம் என அழைக்கப்படும் பூவரசன்குப்பம்.
இக்கோயிலில் சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு தேர் செய்யப்பட்டு, ஜூன் 1 -ஆம் தேதி வெள்ளோட்டம் நடத்தப்பட்ட நிலையில் நிகழாண்டில் பிரம்மோத்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 30- ஆம் தேதி கொடியேற்றமும், அன்று மாலை சிம்ம வாகனத்தில் லட்சுமி நரசிம்மர் புறப்பாடும் நடைபெற்றது.
தொடர்ந்து ஹம்சம், சூரியபிரபை, கருட, சேஷம், சந்திரபிரபை, நாச்சியார் திருக்கோலம், யாளி என காலை, மாலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
புதன்கிழமை (ஜூலை 5) காலை சூர்ணாபிஷேகமும், மாலையில் யானை வாகனப்புறப்பாடும் நடைபெற்றது. வியாழக்கிழமை (ஜூலை 6) காலை 8 மணிக்கு நவக்கலச திருமஞ்சனம் நடைபெற்ற நிலையில், பின்னர் அமிர்தவல்லி நாயகி அம்மன் உடனுறை லட்சுமி நரசிம்மப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடை பெற்றது. கோயில் அர்ச்சகர் எஸ். பார்த்தசாரதி பட்டர் இந்நிகழ்வை நடத்தினார். மாலையில் கற்பகவிருட்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வெள்ளிக்கிழமை குதிரை வாகனப் புறப்பாடு நடைபெற்ற நிலையில், சனிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. விழுப்புரம் எம்எல்ஏ இரா. லட்சுமணன் தேர் வடம் பிடித்து, தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
நான்கு மாடவீதிகளின் வழியாக வலம் வந்து தேர் நிலைக்கு வந்தடைந்தது.
திருவிழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.சந்திரன், செயல் அலுவலர் கு.கார்த்திகேயன் உள் ளிட்டோர் செய்திருந்தனர்.