முகப்பு
தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி... எம்எல்ஏ கோ.ஐயப்பன் வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்ததால் பரபரப்பு!

கடலூரில் திமுக எம்.எல்.ஏ., கோ.ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து. அவரது ஆதரவாளர்கள் திங்கள்கிழமை காலை அவரது வீட்டின் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 10 ஜூலை 2023, 2:26 pm IST
கடலூரில் திங்கள்கிழமை தனது வீட்டின் அருகே கூடிய ஆதரவாளர்களிடம் பேசும் கடலூர் எம்எல்ஏ., கோ.ஐயப்பன்.
பகிர்:


நெய்வேலி: கடலூரில் திமுக எம்.எல்.ஏ., கோ.ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து. அவரது ஆதரவாளர்கள் திங்கள்கிழமை காலை அவரது வீட்டின் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் தொகுதி திமுக எம்எல்ஏ கோ.ஐயப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மா்ம நபா் பெட்ரோல் குண்டு வீசியதால் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் அருகே உள்ள நல்லாத்தூரில் தனியாா் மண்டபத்தில் திமுக நிா்வாகி மணிவண்ணனின் இல்ல நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திமுகவைச் சோ்ந்த கடலூா் தொகுதி எம்எல்ஏ கோ.ஐயப்பன் இரவு 8 மணியளவில் வந்தாா். அவா் மண்டபத்துக்குள் நுழையும்போது, அந்தப் பகுதியில் பைக்கில் வந்த மா்ம நபா் மண்டப வளாகத்துக்குள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றாா். மண்டப வெளி வளாகத்தில் பெட்ரோல் குண்டு விழுந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. இதையடுத்து அங்கிருந்து எம்எல்ஏ பாதுகாப்பாக வெளியேறினாா்.

Advertisement

Advertisement

நிகழ்விடத்தில் மாவட்ட எஸ்பி ராஜாராம் நேரில் ஆய்வுசெய்து விசாரணை நடத்தினாா். பெட்ரோல் குண்டு வீசிய மா்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்எல்ஏவை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி எல்லைப் பகுதி என்பதால், புதுச்சேரியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திங்கள்கிழமை எம்.எல்.ஏ., கோ.ஐயப்பன் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் ஒன்று திரண்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. இதையடுத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் இடையே எம்எல்ஏ., கோ.ஐயப்பன் பேசியதாவது, யாருடைய தூண்டுதலின் பெயரில் யார் இச்செயலை செய்தார்கள் என்று தெரியவில்லை. காவல் கண்காணிப்பாளர் ரா.ராஜாராம் துரிதமாக செயல்பட்டு வருகிறார். காவல்துறையினர் அவர்களுக்குரிய பாணியில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், சந்தேகத்தின் பெயரில் இருவரை பிடித்து ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். 

நான் எங்கு சென்றாலும் தனியாக செல்பவன். துணைக்கு யாரையும் அழைத்துச் செல்வது இல்லை. யாருக்கும் துரோகம் செய்ததில்லை. என் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் யாரோ கீழ்த்தரமான, மலிவான இச்செயலை செய்துள்ளனர். 

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருங்கள். மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். நான் மூன்றாவது நபர் அல்ல உங்களில் ஒருவர். எனக்கு ஒன்றும் ஆகாது. எனவே அனைவரும் அமைதியாக கலந்து செல்ல வேண்டும் என  எம்.எல்.ஏ., கோ.ஐயப்பன் கேட்டுக்கொண்டார். 

நலம் விசாரிப்பு...
நெய்வேலி எம்எல்ஏ., சபா.ராஜேந்தின், கோ.ஐயப்பனை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments