முகப்பு
தமிழ்நாடு

புதிதாக 4,200 பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர்

தமிழகத்தில் போக்குவரத்துத் துறைக்காக, புதிதாக 4,200 பேருந்துகள் வாங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:19 PM
அமைச்சர் சிவசங்கா்
பகிர்:


சென்னை: தமிழகத்தில் போக்குவரத்துத் துறைக்காக, புதிதாக 4,200 பேருந்துகள் வாங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் பணியாளர்கள் ஓய்வெடுக்கும் ஓய்வறைகளில் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்படும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மத்திய பணிமனையில் இருக்கும் பணியாளர்கள் ஓய்வறையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது.

மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.

14வது ஊதியக் குழு பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்கப்படுவதற்கு அடையாளமாக 10 தொழிலாளர்களுக்கு அமைச்சர் நேரில் வழங்கினார். இதனைத் தொடர்ந்து 1.14 லட்சம் பேருக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட உள்ளது.

சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று குளிரூட்டப்பட்ட பணியாளர் ஓய்வறையை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. தற்காலிகமாக, ஒப்பந்த பணியாளர்கள் போக்குவரத்துத் துறையில் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

தமிழகத்துக்கு புதிதாக 4200 பேருந்துகள் வாங்கப்படும் என்றும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.