க.பரமத்தி அருகே தனியார் பேருந்து மீது கார் மோதல்: 2 பேர் பலி
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.
கரூர்: கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.
கரூர் திருப்பதிலே புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(32). இவர் தனது தாய் மோகனாவுக்கு(65) உடல்நிலை சரியில்லாததால் கோவைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது தாயையும், அக்காள் மகன் தரூண்பிரசாத்(10) என்பவரையும் அழைத்துச் சென்றுள்ளார்.
கார் பிற்பகல் 3 மணியளவில் கரூர்-கோவைச்சாலையில் க.பரமத்தி அருகே காருடையாம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைத்தடுமாறி எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க | முதல்வர் மு.க..ஸ்டாலின் நாளை பெங்களூரு பயணம்!
இதில், காரை ஓட்டிச் சென்ற ராம்குமாரும், அருகே அமர்ந்திருந்த தரூண்பிரசாத்தும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மோகனா படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த க.பரமத்தி போலீசார், இருவரது உடலையும் மீட்டு உடல் கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த மோகனாவை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் தனியார் பேருந்து இருந்த பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.