மணல் லாரி மோதி பள்ளி மாணவர் பலி
திருக்காட்டுப்பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய மாணவர் மணல் லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய மாணவர் மணல் லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் முதன்மைச் சாலையைச் சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி. இவரது மகன் கவிபாலன் (5) திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற இவர் வேனில் மாலையில் வீட்டுக்குத் திரும்பினார். வீடு அருகே வேனிலிருந்து இறங்கிய இவர் எதிரே உள்ள வீட்டுக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றார்.
Advertisement
அப்போது, அந்த வழியாக மருவூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி மணல் ஏற்றி வந்த லாரி கவிபாலன் மீது மோதியது. இதனால், இவர் முன்சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்ததால், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, இச்சம்பவத்தைக் கண்டித்து கிராம மக்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் லாரியின் கண்ணாடியை உடைத்துச் சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.