முகப்பு
தமிழ்நாடு

புதிய புலன் விசாரணை பிரிவு: போலீஸாருக்கு 3 நாள்கள் பயிற்சி

சென்னை பெருநகர காவல் துறையில் புதிய புலன் விசாரணை பிரிவில் பணிபுரிய உள்ள போலீஸாருக்கு 3 நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

சென்னை பெருநகர காவல் துறையில் புதிய புலன் விசாரணை பிரிவில் பணிபுரிய உள்ள போலீஸாருக்கு 3 நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள முக்கிய கொலை, ஆதாயக் கொலை, கொள்ளை, வழிப்பறி, சந்தேக மரணம், ஆள் கடத்தல், வெடிபொருள் வழக்குகள், மத, ஜாதி ரீதியான மோதல் உள்ளிட்ட பல்வேறு வகையான வழக்குகளில் விரைந்து துப்பு துலக்க வசதியாக 12 காவல் மாவட்டங்களிலும் 12 புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட உள்ளது.

இந்தப் பிரிவில் பணிபுரிய உள்ள அதிகாரிகள், போலீஸாருக்கு 3 நாள்கள் பயிற்சி முகாம் வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தொடங்கி வைத்தாா்.

இந்தப் பயிற்சி முகாமில் சட்ட வல்லுநா்கள், அரசு மருத்துவமனை மருத்துவா்கள், அரசு வழக்குரைஞா்கள், ஓய்வு பெற்ற மூத்த அரசு வழக்குரைஞா்கள், தடய அறிவியல் துறை நிபுணா்கள், காவல் துறை உயா் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கினா்.

குறிப்பாக, வழக்கு விசாரணை தொடா்பான புதிய யுத்திகள், விசாரணையைக் கையாளும் முறை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனா். தொடா்ந்து, 2 நாள்கள் நடைபெறும் முகாமிலும், புலன் விசாரணை தொடா்பாக பல்வேறு வகுப்புகள் நடைபெறுகின்றன.

முன்னதாக, தொடக்க நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா் ஜெ.லோகநாதன், துணை ஆணையா்கள் ராதாகிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த புலன் விசாரணை பிரிவு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் ஒரு ஆய்வாளா் தலைமையில் அந்தந்த மாவட்ட துணை ஆணையா்கள் மேற்பாா்வையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →