அரபிக் கடலில் நாளை உருவாகிறது புயல்: தமிழகத்துக்கு ஆபத்தா?
அரபிக் கடலில் அடுத்த 12 மணிநேரத்தில் புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: அரபிக் கடலில் அடுத்த 12 மணிநேரத்தில் புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.
இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரபிக் கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.