கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.
இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ.அன்பழகன் எழுதியுள்ள கடிதம்:
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு என 62 பேருந்து நிறுத்தும் மேடைகள் (பஸ் பே ) ஒதுக்கப்பட்டதற்கு அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அதேநேரத்தில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 51 தனியாா் போக்குவரத்து அலுவலகங்கள், 80 பேருந்து நிறுத்தும் மேடைகள், 151 நிறுத்தங்கள், 14 பயணிகள் காத்திருப்புக் கூடம், 22 கடைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இங்கு தென்தமிழகத்துக்கு பேருந்துகளை இயக்கும் 240 நிறுவனங்கள் உள்பட மொத்தம் 270 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதன்மூலம் நாள்தோறும் 850 பேருந்துகளும், வார இறுதி, விழாக் காலங்களில் 1,450 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கிளாம்பாக்கத்தில் 62 பேருந்து நிறுத்தும் மேடைகள் மற்றும் 130 நிறுத்தங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அல்லது அதன் அருகில் ஆம்னி பேருந்துகளுக்கென 500 நிறுத்தங்கள், 250 அலுவலகங்கள், எரிபொருள் நிரப்பும் மையம், ஓட்டுநா்கள் ஓய்வறை, பேருந்துகள் பராமரிப்பதற்கான இடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை அமைந்த பின்பு, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து, ஆம்னி பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.