காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை!
சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று நள்ளிரவு வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று அதிகாலை அவரை கைது செய்தனர். அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட இசிஜி நிலையாக இல்லாத காரணத்தால் ஆஞ்சியோகிராம்(இருதய ரத்த நாள பரிசோதனை) செய்யப்பட்டதில், மூன்று முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து உடனடியாக செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மற்றும் மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் குடும்பத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டதில், காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.