சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலியின் காரணமாக ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிறைத்துறை கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் உள்ளார்.
மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜி ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினர் கருதினர்.
இதன் விளைவாக, நுங்கம்பாக்கம் ஹடோஸ் சாலையில் உள்ள சாஸ்திரி பவனில் இருக்கும் அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் போலீஸ் பாதுகாப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
அங்கு சந்தேகத்துக்குரிய சுற்றித் திரியும் நபர்களையும் போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். நிலைமை சீராகும் வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடு அங்கு நீடிக்கும் என சென்னை பெருநகர காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.