வாடகைக்கு கொடுத்த வீட்டை காலி செய்யாததால் உரிமையாளர் தற்கொலை!
வாடகைக்கு கொடுத்த வீட்டை காலி செய்யாததால் , வீட்டின் உரிமையாளர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாடகைக்கு கொடுத்த வீட்டை காலி செய்யாததால் , வீட்டின் உரிமையாளர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி, நிரப்பு சாலை லட்சுமி இல்லத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் (50). இவர் பிரபல நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நளினா (45) மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஹரிஹரன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், அவரது வீட்டை அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இதில் இவர்களுக்குகிடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில் வீட்டை காலி செய்யும்படி ஹரிஹரன் பலமுறை தமிழ்செல்வியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் வீட்டை காலி செய்யவில்லை. இதனால் அவர் பத்துகாணி காவல் நிலையத்திலும் , மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்துள்ளார்.
ஆனால் காவல்துறையோ, மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்தோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த ஹரிஹரன் அவரது மனைவி நளினாவுக்கு, வியாழக்கிழமை இரவு அனுப்பிய மின்னஞ்சலில், தான் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பிரபல விடுதியில் இருப்பதாகவும், அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனால் பயந்து போன நளினா தனது உறவினர்களை, விடுதிக்கு அனுப்பி பார்க்கும்படி கூறியுள்ளார். அப்போது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது .
இது குறித்து அவரது மனைவி நளினா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.