முகப்பு
தமிழ்நாடு

விறுவிறுப்பாக நடைபெறும் நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல்!

நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

10 உறுப்பினர்களுக்கான தேர்தலில் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 394 பேர் வாக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 243 ZD-இன் கீழ் மாவட்டத் திட்டக் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவின் துணைத் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் இருப்பார். இவருக்கு உதவிட உதவி திட்ட இயக்குநர்களும் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் இருப்பர். மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் குடிநீர், வடிகால் வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கு, இம்மாவட்டத் திட்டக்குழு திட்டங்களை வகுத்து மாநில அரசிற்கு வழங்கும். இந்தத் திட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நெல்லை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.

ஊரகப் பகுதிகளுக்கான உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில் நகர்ப்புற பகுதிகளுக்கான உறுப்பினர்கள் 10 பேர் தேர்வு செய்து வருவதற்காக தேர்தல் நடைபெறுகிறது.

10 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி உறுப்பினர்கள் 394 பேர் வாக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 வாக்குகள் செலுத்தும்படி தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான தேர்தல் இன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் முகவர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த தேர்தலின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் காவல் உதவி ஆணையாளர் தலைமையிலான போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து நபர்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் வேட்பாளர்கள் முகவர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தனித்தனி அடையாள அட்டைகளும் நடத்தும் அலுவலரால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மாலை 3 மணி வரை நடைபெறும் தேர்தல் காரணமாக வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் நடந்த பகுதியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டு வருகின்றது.

முழு கட்டுரையைப் படிக்க →