கோவை: பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பிய இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய்(28). இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின்னர் பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக உள்ள இவரது மனைவி பிரசவத்துக்காக கேரளாவில் உள்ள அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று இடையர்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி(20) என்பவர் டி.கோட்டாம்பட்டியில் உள்ள தனது ஆண் நண்பரான சுஜய் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுப்புலட்சுமியை சுஜய் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். இதில் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீஸார் சுப்புலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப் பதிவு செய்த மகாலிங்கபுரம் போலீஸார், கொலைக்கான காரணம் கள்ளக்காதலா வேறு ஏதும் காரணமான என விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சுஜய்யை, மகாலிங்கபுரம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.