திருவள்ளூர் மாவட்டத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியிலுள்ள உறவினர் இல்லத்திற்குச் சென்றிருந்த திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, போளூர், பார்வதி அகரம் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா(வயது 65), ஹேமலதா (வயது 16) மற்றும் கோமதி ஆகியோர் இன்று (9.5.2023) காலை திருத்தணியிலுள்ள பழைய கைவிடப்பட்ட கல்குவாரி குட்டை நீரில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகுந்த வேதனையடைந்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது கோடை காலமாகையால் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர், சிறுமியர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளங்கள், ஏரிகள், அருவி மற்றும் ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்கின்றனர். அவ்வாறு குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி நீரில் மூழ்கி உயிரிழக்கும் துன்ப நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிகழ்வுகள் நம் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையை அளிப்பதோடு பல குடும்பங்களை தீரா துயரிலும் ஆழ்த்தி விடுகின்றன.
இதனைத் தவிர்க்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளை போதுமான பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வினை பொதுமக்களிடையே தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏற்படுத்தவேண்டும் எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் போதிய கவனம் செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.