புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசையின் செயல்பாடு விளம்பர அரசியலாக உள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியில் எந்தவொரு திட்டங்களும் செயல்படுத்தாததால், அம்மாநில மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். இதனால் கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.
மேலும், மத்திய அரசு ஆளுநர்களை வைத்து எதிர்கட்சி ஆளும் மாநில முதல்வர்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், ஜிப்மர் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அந்தர் பல்டி அடித்துள்ளார். துணைநிலை ஆளுநர் உண்மைக்கு புறம்பாக பேசக்கூடாது. அவர் பேசுவது அவருடைய பதவிக்கு அழகல்ல. இவர் புதுச்சேரி மற்றும் தெலங்கானாவுக்குதான் ஆளுநர். ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் இவர் ஏன் மூக்கை நுழைக்கிறார் என கேள்வி எழுப்பிய நாராயணசாமி, தமிழிசை சௌந்தரராஜன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும் என்றார்.
மேலும் தமிழிசை, முதலமைச்சரின் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு முதல்வர் ரங்கசாமியை செயல்படவிடாமல் தடுக்கிறார் என்றும், இவர்தான் புதுச்சேரி மாநிலத்தின் சூப்பர் முதல்வர் என்றவர், தமிழிசையின் செயல்பாடு விளம்பர அரசியலாக உள்ளது. அவரது செயல்பாடு புதுச்சேரி வளர்ச்சிக்காக இல்லை. துணைநிலை ஆளுநர் பொறுப்போடு செயல்பட வேண்டும் என வலியுறுத்திய நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.