திருக்காட்டுப்பள்ளி அருகே ரெளடி வெட்டிக் கொலை
திருக்காட்டுப்பள்ளி அருகே திருசினம்பூண்டியை சேர்ந்த ரெளடி வி. எஸ்.எல். குமார் (எ) முருகையன் செவ்வாய்க்கிழமை (அக்.31) இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருசினம்பூண்டியை சேர்ந்த ரெளடி வி. எஸ்.எல். குமார் (எ) முருகையன் செவ்வாய்க்கிழமை (அக்.31) இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருசினம்பூண்டி கீழப்படுகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் வி.எஸ்.எல். குமார் (எ) முருகையன் (50). இவர் வழக்கமாக திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து இரவு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்புவது வழக்கம். அதுபோல் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் திருவையாறு - கல்லணை சாலையில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு மேற்கே சுமார் 200 மீட்டர் தூரத்தில் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று அவரது வாகனத்தில் மோதியதில் குமார் தடுமாறி சாலையின் தென்புறம் விழுந்தார்.
தொடர்ந்து, முருகையனின் காலில் மர்ம நபர்கள் வெட்டியதால், நிலை தடுமாறி விழுந்துள்ளார். பின், அவரது தலையில் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
இது குறித்து தகவல் அறிந்த தோகூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் பார்வையிட்டார். திருவையாறு டிஎஸ்பி ராமதாஸ், திருக்காட்டுப்பள்ளி ஆய்வாளர் ஜெயக்குமார், உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் இது குறித்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திருச்சி இரட்டை கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் முருகையன் தொடர்பு உள்ளவர் என்றும், ரெளடிப் பட்டியலில் உள்ளதாகவும் தோகூர் போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.