தீபாவளி: நாளைமுதல் கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளைமுதல் கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளைமுதல் கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இதன் காரணமாக, மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நகரப் பகுதிகளிலிருந்து வெளியேறும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர்.
இந்த நிலையில், நவ. 9, 10, 11 ஆகிய தேதிகளில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | சென்னை: ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் மட்டுமே நின்றுசெல்லும்!
வழக்கமாக கூட்ட நெரிசல் நேரமான இரவு 8 முதல் 10 மணிவரை 9 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படுவதற்கு பதிலாக, இரு வழித்தடங்களிலும் 6 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.