16 நாள்களுக்கு பின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 16 நாட்களுக்குப் பின் நீர் வரத்து சீரானதையடுத்து இன்று முதல் பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்படுகிறது.
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக அக்.31 முதல் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 16 நாட்களுக்குப் பின் நீர் வரத்து சீரானதையடுத்து இன்று முதல் பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்படுகிறது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து மலைப்பகுதி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்மழை பெய்தது. மாஞ்சோலை, செங்கல்தேரி வனப்பகுதியிலும் தொடர்ந்து பலத்தமழை பெய்ததையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
இதையும் படிக்க | வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
இதையடுத்து அக்.31 முதல் வனத்துறையினர் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்தனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததையடுத்து மணிமுத்தாறு அருவியிலும் நீர்வரத்துக் குறைந்து சீரானது. இதைத்தொடர்ந்து 16 நாள்களுக்குப் பின் வனத்துறையினர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதித்தனர்.