அரபு நாட்டில் பலியான திருச்சி தொழிலாளி: உடலைக் கொண்டுவர தவிக்கும் குடும்பத்தினர்!
அரபு நாட்டில் பலியான திருச்சி தொழிலாளியின் உடலைக் கொண்டுவர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி: அரபு நாட்டில் பலியான திருச்சி தொழிலாளியின் உடலைக் கொண்டுவர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி வாழவந்தான் கோட்டை முல்லை வாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (43). இவர் திருச்சியில் கூலி வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சவுதி அரேபியாவில் தோட்ட வேலைக்காக சென்றுள்ளார்.
ஒரு வருட ஒப்பந்தம் முடிந்து, மீண்டும் அதை புதுப்பித்து இரண்டு ஆண்டுகளாக அங்கு வேலை செய்து வந்தார்.
Advertisement
இந்நிலையில், கடந்த நவ.18 ஆம் தேதி பணி முடிந்து, அறைக்கு திரும்பியபோது, சாலையை கடக்க முயன்றதில் அவ்வழியே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத் தகவல் அங்குள்ள நபர் ஒருவர் மூலம் அவரது மனைவி ரோஸ்லின் மேரிக்கு தெரிய வந்தது. இதனால் மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், ராஜசேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மனைவி மற்றும் இரு குழந்தைகள், திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்து முறையிட்டனர்.
இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் கோரிக்கை மனு அளித்தனர்.
இறந்து இரண்டு நாள்களுக்கு மேலாகியும் அவரைப் பற்றிய உண்மை நிலவரம் முழுமையாக தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: 10 ஆண்டுகளாகக் கிடப்பிலுள்ள செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலம்!
இதுகுறித்து தமிழக அரசும், துறை சார்ந்த அதிகாரிகளும் துரித நடவடிக்கை மேற்கொண்டு ராஜசேகரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.