3.5% கொழுப்பு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட ஆவின் டிலைட் பால் டிச.1ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் விநியோகம் செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவினில் 4.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாக கடந்த சில நாள்களாக சில அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் குற்றம்சாட்டி வந்தனா்.
இதை ஆவின் நிறுவனம் மறுத்ததோடு பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்தப்போவதில்லை என்றும் அதற்கு பதிலாக 3.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட ஊதா நிற டிலைட் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
இதனிடையே, பச்சை நிற பால் பாக்கெட்டுகள் சனிக்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக எழுந்த சா்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை மற்றும் அதன் புறநகா் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.25) காலை வழக்கம்போல் ஆவின் நிா்வாகம் மூலம் பால் முகவா்களுக்கு பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.