கௌதமி விலகல் மனவேதனை அளிக்கிறது: பாஜக தேசிய மகளிரணி தலைவி!
பாஜக-வுக்காக கடுமையாக உழைத்த நடிகை கௌதமி கட்சியில் இருந்து விலகிய செய்தி மனவேதனை அளிக்கிறது என அக்கட்சி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவியும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் இன்று (அக்டோபர் 23) கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகுவது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து வானதி சீனிவாசன் பேசியதாவது: “பாஜகவில் தீவிரமாக உழைக்கக்கூடிய பெண்மணி கௌதமி. அவர் எந்தளவுக்கு கட்சிக்காக கடுமையாக உழைத்தார் என்பது எனக்குத் தெரியும். தான் ஒரு சினிமா நட்சத்திரம் என்பதால் தனக்கு முன்னுரிமை தரவேண்டும் என அவர் யோசித்ததே இல்லை.
அந்தளவுக்கு கட்சியின் அடிப்படைத் தொண்டர் போல பணியாற்றக் கூடியவர். அவர் எதற்கும் சோர்ந்து போகக்கூடியவர் அல்ல. தேசிய மகளிரணியில் இணைந்து பணியாற்றுமாறு நானே அவரிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் மாநில அரசியலில் பணியாற்றுவதாக கூறிவிட்டார்.
Advertisement
அதன்பின் அவருடனான எனது சந்திப்புகள் குறைந்துபோனது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஒரு வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இந்நிலையில் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவரின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படிக்க: மியான்மரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!
அவர் பாஜகவில் இருந்து மிகுந்த மனவேதனையுடன் விலகுவதாக அறிவித்துள்ள கடிதத்தைப் பார்க்கும்போது எனக்கு கடுமையான மனவேதனை ஏற்படுகிறது. கட்சியை விட்டு வெளியே வந்தால்தான் புகார் பதிவு செய்வேன் என நெருக்கடி கொடுத்தார்களோ என சந்தேகம் எழுகிறது.” என்று கூறினார்.