முகப்பு
தமிழ்நாடு

காங்கயம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: கணவன்-மனைவி பலி; 4 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கணவன்-மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Updated On : 18 செப்டம்பர், 2023 at 7:34 PM
பகிர்:

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கணவன்-மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் குழந்தைகள் இருவர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (36).  இவருடைய மனைவி ரம்யா (32), மகன்கள் தர்ஷன் (7), அகிலன் (2), மாமனார் பரமசிவம் (64), மாமியார் ராஜாமணி (51) ஆகிய 6 பேரும் ஒரே காரில் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று விட்டு, திங்கள்கிழமை மாலை தாராபுரம் வழியாக ஈரோடு திரும்பிக் கொண்டிருந்தனர். 

காரை மதன்குமார் ஓட்டி வந்த நிலையில், காங்கயம் அருகே தாராபுரம் சாலை, வட்டமலை பகுதியில் திங்கள்கிழமை மாலை 3 மணியளவில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் 3 முறை தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

Advertisement

இந்த சம்பவத்தில் மதன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்ற 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மதன்குமாரின் மனைவி ரம்யா வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

இதையடுத்து மதன்குமாரின் மகன்களான தர்ஷன், அகிலன், மாமனார் பரமசிவம், மாமியார் ராஜாமணி ஆகிய 4 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து காங்கயம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.