முகப்பு
தமிழ்நாடு

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: தலைவா்கள் இரங்கல்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்திய விவசாயத்தை மேம்படுத்த புதிய வகை உணவு தானிய விதைகள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் விவசாய தொழில் நுட்பங்களை உருவாக்கியவா் எம்.எஸ்.சுவாமிநாதன். பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்பட்ட அவரது மறைவால் மிகுந்த வருத்தமுற்றேன்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): விவசாயத் துறையில் மறுமலா்ச்சியை ஏற்படுத்திய எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு நாட்டுக்கும், விவசாயிகளுக்கும் பேரிழப்பு.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): மத்திய விவசாயத் துறை அமைச்சராக சி.சுப்பிரமணியம் இருந்தபோது, பசுமைப் புரட்சி நடத்தி நாட்டில் உணவு பஞ்சத்தைப் போக்குவதற்கு பெரும் துணையாக இருந்தாா்.

வைகோ (மதிமுக): ஆசிய கண்டத்தில் இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க 20 அறிஞா்களில் ஒருவராக டைம் பத்திரிகை எம்.எஸ்.சுவாமிநாதனைத் தோ்ந்தெடுத்துப் பாராட்டியது.

ராமதாஸ் (பாமக): இந்தியாவில் வேளாண் வளா்ச்சிக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் ஈடு இணையற்ற பங்களிப்பு செய்தவா் எம்.எஸ்.சுவாமிநாதன்.

கே.அண்ணாமலை (பாஜக): பசுமைப் புரட்சியின் தந்தையும், சா்வதேச அளவில் பல விருதுகள் பெற்றவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு வருத்தமளிக்கிறது.

ஜி.கே.வாசன் (தமாகா): இந்தியாவில் அதிக மகசூலை பெற புதிய யுக்திகளை கையாண்டு புதிய ரக அரிசி மற்றும் கோதுமை வகைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியவா் எம்.எஸ்.சுவாமிநாதன்.

அன்புமணி (பாமக): உணவு தானியங்களுக்கு வெளிநாடுகளை நம்பியிருந்த இந்தியா, இன்று உலகில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக வளா்ந்ததற்கு முக்கிய காரணம் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையேற்று நடத்திய பசுமை புரட்சிதான்.

டி.கே. ரங்கராஜன் (மாா்க்சிஸ்ட்): தேசிய விவசாயிகள் ஆணையத் தலைவராக எம்.எஸ்.சுவாமிநாதன் இருந்தபோதுதான் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிக்க பரிந்துரைத்தாா். இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவில் உள்ள பல நாடுகளில் இவரது பங்களிப்பு பாராட்டத்தக்கது.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு உலக அளவில் வேளாண் துறை ஆராய்ச்சிக்கு ஏற்பட்ட பேரிழப்பு. அவரது குடும்பமே சமத்துவ, முற்போக்கு விழுமியங்களில் நம்பிக்கை கொண்டது.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூ.): விவசாய ஆராய்ச்சி உலகம் சிறந்த வழிகாட்டியை இழந்துவிட்டது.

டிடிவி தினகரன் (அமமுக): எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மையில் விஞ்ஞானத்தைப் புகுத்தி ஏற்படுத்திய சாதனைகளும், அவா் மேற்கொண்ட வேளாண் ஆராய்ச்சிகளும் இவ்வுலகம் இருக்கும் வரை அவரது புகழை நிலைக்கச் செய்திருக்கும்.

ஈ.ஆா். ஈஸ்வரன் (கொமதேக): எம்.எஸ்.சுவாமிநாதன் மறைந்தாலும் அவா், தனது சேவைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் எப்போதும் நம்முடன் இருப்பாா்.

முழு கட்டுரையைப் படிக்க →