முழு வீச்சில் நடைபெறும் எண்ணெய் அகற்றும் பணி: சிபிசிஎல்
எதிர்பாராத வெள்ளம் காரணமாக எண்ணூர் முகத்துவார பகுதியில் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை நீக்கும் பணி குறித்து சிபிசிஎல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எண்ணூர் முகத்துவார பகுதியில் கடலில் கலந்த எண்ணெய் படலங்களை நீக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) தெரிவித்துள்ளது.
சிபிசிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் அகற்றும் பணியில் 240-க்கும் அதிகமான தேர்ச்சிப் பெற்ற நபர்கள், 125 படகுகள், நீரில் இருந்து எண்ணெய் நீக்கும் கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1500 மீட்டர் பரப்பளவுக்குத் தடுப்பு வளையங்கள், எண்ணெய் படலம் நீர்ப்பரப்பில் அதிகளவுக்கு பரவாமல் இருக்க எட்டு வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் நீக்கும் கருவிகள் ஆறு பயன்பாட்டில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நெல்லை, தூத்துக்குடியில் நாளை முதல்வர் நேரில் ஆய்வு!
எதிபாராத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆலையில் தேங்கி இருந்த எண்ணெய்க் கழிவுகள் கால்வாயில் வெளியேறி இருக்கலாம் என சிபிசிஎல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.