முகப்பு
தமிழ்நாடு

நெல்லை அருகே மதுக்கூட உரிமையாளர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி அருகே  பேட்டையில் மதுக்கூட உரிமையாளர் திங்கள்கிழமை இரவு மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:42 AM
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே  பேட்டையில் மதுக்கூட உரிமையாளர் திங்கள்கிழமை இரவு மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பேட்டை அருகேயுள்ள மயிலப்புரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் பிச்சைராஜ் (52) . இவருக்கு திருமணமாகி  மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.  பேட்டை ரூரல் ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவரான இவர், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 18 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

பேட்டை எம்ஜிஆர் நகரில் டாஸ்மாக் கடை அருகே மதுக்கூடம் நடத்தி வந்தார்.
திங்கள்கிழமை இரவு மதுக்கூடத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாராம். பேட்டை ரயில் நிலையத்தை அடுத்த சுரங்கப்பாதை அருகே சென்றபோது ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. அவரை மீட்டு பேட்டை தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். 

பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிச்சைராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்ததும் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் அனிதா, உதவி ஆணையர் ராஜேஷ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் குறித்து பேட்டை காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். 

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் மயிலப்பபுரம், பேட்டை பகுதிகளில் கூடுதலான காவல் துறையினர் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கொலை நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார் மாநகர காவல் துணை ஆணையர் அனிதா.

முழு கட்டுரையைப் படிக்க →