500 டாஸ்மாக் கடைகள் நாளைமுதல் மூடப்படும்: தமிழக அரசு
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் நாளைமுதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் நாளைமுதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் உடனடியாக மூடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி 500 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு அரசாணையும் வெளியானது.
இந்நிலையில், நாளைமுதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
“தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறையின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாளிட்ட அரசாணை எண்.140, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.
மேற்படி, அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.6.2023 முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.”