விளையாட்டு ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி
விளையாட்டு நாடுகளுக்கு இடையே சகோதரத்துவத்தை வளர்த்து, ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.
போட்டியின் இடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என தொடர் முழக்கமிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
விளையாட்டு மைதானத்திற்குள் மதரீதியாக முழக்கமிட்டதற்கு தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விடியோவை பகிர்ந்துள்ள அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது: "இந்தியா விருந்தோம்பலுக்கும், விளையாட்டு மனப்பான்மைக்கும் புகழ்பெற்ற நாடு. அப்படியான இந்தியாவில் பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கு எதிரான நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது. விளையாட்டு என்பது இரு நாடுகளுக்கு இடையே சகோதரத்துவத்தை வளர்த்து, ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். வெறுப்பை பரப்புவதற்கான கருவியாக விளையாட்டை பயன்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது" என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அமெரிக்காவில் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு!
உலகக்கோப்பைத் தொடரின் தொடக்க நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் வழக்கத்திற்கு மாறாக, தொடரின் மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதிக முக்கியத்துவம் அளித்ததும் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.