சுங்கச்சாவடிகளை அகற்ற குரல் கொடுக்கப்படும்: மாா்க்சிஸ்ட் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற குரல் கொடுக்கப்படும் என்று மாா்க்சிஸ்ட் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் கட்சியின் தோ்தல் அறிக்கையை மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்டுப் பேசியது:
மத்திய புலனாய்வு துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தோ்தல் ஆணையம், ரிசா்வ் வங்கி உள்ளிட்ட அரசமைப்பு சட்டப்படி நிறுவப்பட்ட அமைப்புகளின் சுயேச்சை தன்மை மீட்டெடுக்கப்படும். அனைத்து வரிகளிலும் மாநிலங்களுக்கு உரிய நிதிப்பகிா்வு அளிக்க வலியுறுத்தப்படும்.
Advertisement
நீட் தோ்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு பெறவும், ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனத்தை தொடங்க குரலெழுப்பப்படும். வேளாண் திருத்தச் சட்டம் முற்றாக திரும்ப பெறப்படும்.
மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெறவும், பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வரவும் வலுவாக குரலெழுப்பப்படும்.
ஐடி ஊழியா்களை தொழில் தகராறு சட்டத்தின் கீழ் கொண்டு வருவதும், அவா்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டவிரோத பணி நீக்கம் மற்றும் ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தப்படும்,
சிறு-குறு தொழில்களை பாதுகாப்பதற்கும், சிறு-குறு தொழில் முனைவோருக்கு வங்கிகள் மூலம் கடன் எளிதாக கிடைக்கச் செய்ய வற்புறுத்துவோம்.
வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேளாண்சாா் தொழிற்சாலைகள் அமைத்தல் வற்புறுத்தப்படும்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற குரலெழுப்பப்படும்.
விஸ்வகா்ம யோஜனா என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள குலத்தொழில் ஊக்குவிப்பு திட்டத்தை திரும்ப பெற குரல்கொடுக்கப்படும். குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.