முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!
முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்துக்கான தண்ணீர் பெறும் உரிமை பாதுகாக்கப்படும்... கேரளத்தில் பாஜக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி
திருவனந்தபுரம் : முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகம் தண்ணீர் பெறும் உரிமை பாதுகாக்கப்படும் என்று கேரளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த அணை விவகாரத்தில் கேரளத்தின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் வரும் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், அம்மாநில வாக்காளர்களைக் கவர தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளன.
அந்த வகையில், பாஜகவின் கேரள தேர்தல் அறிக்கை இன்று(மார்ச் 31) வெளியிடப்பட்டது. அதில் தமிழக தேர்தலையும் மையப்படுத்தி, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் முக்கிய வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மக்களின் பிரச்னைகளுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது.
இதன்மூலம், தமிழகம் மற்றும் கேரள பேரவைத் தேர்தல்களில் மேற்கண்ட விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் பாதிப்பில்லாத விதத்தில் வாக்குறுதி அளித்து இரு மாநில வாக்காளர்களையும் கவரும் விதத்தில் பாஜக செயல்பட்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.