நயினார் நாகேந்திரனின் நண்பர் வீட்டில் சோதனை
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நண்பர் மாவீரர் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தேர்தலை யொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்க அவருடைய நண்பரான பிரபல எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் மாவீரர் என்பவரின் வீடு மற்றும் கடையில் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத்தொடர்ந்து நெல்லை சந்திப்பு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகம் எதிரே இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் கடை மற்றும் அம்மன் சன்னதி பகுதியில் இருக்கக்கூடிய அவருடைய இரண்டு வீடுகளிலும் மூன்று குழுக்களாக பத்திற்கு மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டார்கள்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பணம், பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே கடந்த வாரம் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு மது பாட்டில்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடைபெற்றிருப்பது நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.