நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு விழா
நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த மார்ச் மாதம் 22 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகதீபாராதனை காட்டப்பட்டு வருகிறது. இரவு அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. திரளான பக்தர்கள் நாள்தோறும் கோயிலுக்கு வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சித்திரை பெருவிழாவில் புஷ்பபல்லக்கு விழா நடந்தது. இதனைமுன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
Advertisement
மகாமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் இரவு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நகரின் முக்கிய வீதிகளில் புஷ்பபல்லக்கு வலம் வந்தது. என்.டி.எம்.எஸ்.கே.கார்த்தி,கண்ணன் குழுவினரின் நாதலய சங்கமம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொணடனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம் போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் தமிழ் இளைஞர் பக்தர் கழகத்தினர் செய்திருந்தனர்.