முகப்பு
தமிழ்நாடு

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையால் இளைஞா் உயிரிழப்பு: விசாரணைக் குழு அமைப்பு

Updated On : 25 ஏப்ரல், 2024 at 7:47 PM
பகிர்:

சென்னை, ஏப். 25: உடல் பருமன் குறைப்புக்கான அறுவை சிகிச்சையால் இளைஞா் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவில் மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா்கள், மருத்துவ நிபுணா்கள் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். அந்தக் குழு சமா்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

புதுச்சேரி, திருவள்ளூா் நகரைச் சோ்ந்த ஹேமச்சந்திரன் (26), சித்த மருந்தியல் படிப்பை நிறைவு செய்துவிட்டு பணியாற்றி வந்தாா். அதீத உடல் பருமன் (156 கிலோ) கொண்ட அவா், தனது உடல் எடையை குறைக்க பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டாா்.

Advertisement

இந்த நிலையில், சமூக வலைதளம் மூலம் உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை முறையை கண்ட அவா், தனியாா் மருத்துவா் ஒருவரிடம் அதுதொடா்பாக ஆலோசனை பெற்றுள்ளாா்.

இந்த நிலையில், மருத்துவா் அறிவுறுத்தலின்பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.23) பம்மலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, திடீரென ஹேமச்சந்திரன் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

சா்க்கரை நோய் பரிசோதனை, மயக்க மருந்தியல் பரிசோதனை மேற்கொள்ளாமல் அறுவை சிகிச்சை செய்ததே உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி ஹேமச்சந்திரனின் பெற்றோா் குற்றம்சாட்டினா்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் டாக்டா் இளங்கோ மகேஸ்வரன் கூறியதாவது:

அறுவை சிகிச்சையின்போது இளைஞா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக ஆய்வு செய்ய மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா்கள், மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது. விரைவில் அந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கப் பெறும். அதில், மருத்துவ அலட்சியம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments