குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது!
தமிழ்நாட்டிற்கும் தமிழர்களின் வளர்ச்சிக்கும் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் தகைசால் தமிழர் விருது.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கும் தமிழர்களின் வளர்ச்சிக்கும் பணியாற்றியவர்கள் தேர்வு செய்யப்பட்டு தகைசால் தமிழர் விருதினை ஆண்டுதோறும் சுதந்திர நாள் விழாவின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
“தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021-ல் ஆணையிட்டிருந்தார்கள்.
இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில் சங்கரையா, ஆர்.நல்லகண்ணு மற்றும் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதிற்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (1.8.2024) நடைபெற்றது.
அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டப்பேரவை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும் இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் குமரி அனந்தன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.
‘தகைசால் தமிழர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குமரி அனந்தனுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.