சமூக அமைதியை சீர்குலைப்பதாக நடிகர் ரஞ்சித் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் விசிகவை அவமானப்படுத்தும் விதத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தணிக்கை குழுவிடம் புகார் அளித்த நிலையில், அந்த காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது.
இந்த நிலையில், சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ந்து பேசி வரும் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு புகார் அளித்துள்ளார்.
நடிகர் ரஞ்சித் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், நீண்ட நாள்கள் படத்தில் நடிக்காமல் சின்னத்திரையில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கிய ரஞ்சித், அதனை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
முதலில், நாடகக் காதலை எதிர்ப்பதால் நான் சாதிவெறியன் என்றால், ஆம் நான் சாதிவெறியன்தான் எனத் தெரிவித்திருந்தார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், ”ஆணவப்படுகொலை ஒரு வன்முறையோ கலவரமோ அல்ல. எது நடந்தாலும் அது அக்கறையின் காரணமாக நடப்பவைதான்” எனப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.