மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் அந்த கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் செயற்குழு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்த ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்தது.
அதில், மாநிலங்களவையில் ஒரு இடம், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அளிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார். மக்கள் நீதி மய்யமும் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் கமல் ஹாசன், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
எனவே, அந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு யாரை நிறுத்துவது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும் கட்சி பொறுப்பாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார்.
2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிட்ட நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்ததால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக - மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.