ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணை: நெல்சன் மறுப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என இயக்குநர் நெல்சன் விளக்கமளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என இயக்குநர் நெல்சன் விளக்கமளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர்களைப் பிடிக்க தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, மலர்கொடி, அஞ்சலை, ஹரிதரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கொலை சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரெளடி சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்குரைஞர் மொட்டை கிருஷ்ணன், இவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அவரை பிடிக்க ஆக. 20ஆம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, மொட்டை கிருஷ்ணனுடன் செல்போனில் உரையாடியதாக திரைப்பட இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் காவல் துறையினர் அண்மையில் விசாரணை மேற்கொண்டனர். தற்போது அவரைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சனிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாக தகவல் பரவியது.
ஆனால் இந்த தகவலை இயக்குநர் நெல்சன் மறுத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தனது வீட்டுக்கு வந்து எந்த காவல்துறையினரும் தனக்கு சம்மன் அளிக்கவில்லை. காவல்துறையின் எந்த அதிகாரியிடம் எனது இந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது. இதுவரை காவல்துறையிலிருந்து என் வாழ்நாளில் எந்த ஒரு தொலைபேசியிலோ அல்லது நேரிலோ அழைப்பு வந்ததே இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.