முகப்பு
தமிழ்நாடு

இடஒதுக்கீடு இல்லாத பணி நியமனம்: அன்புமணி கண்டனம்

போதையில்லா தமிழ்நாடு இயக்கத்துக்கான பணி நியமனத்தில் தமிழக அரசு இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றவில்லை

Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 7:13 PM
அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

போதையில்லா தமிழ்நாடு இயக்கத்துக்கான பணி நியமனத்தில் தமிழக அரசு இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றவில்லை என்று கூறி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு உள்துறை மற்றும் மதுவிலக்கு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள போதையில்லா தமிழ்நாடு இயக்கத்துக்கு ஊடகம், திறன் பயிற்சி, தரவு பகுப்பாய்வு ஆகியவற்றுக்கான 3 வல்லுநா்கள் தோ்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும், அவா்களுக்கு மாதம் ரூ. 1.50 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் உள்துறைச் செயலா் அறிவித்துள்ளாா்.

இந்தப் பணிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை, வயது வரம்பு இல்லை, எந்த அடிப்படையில் வல்லுநா்கள் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள் என்ற எந்த விவரமும் அறிவிப்பில் இடம் பெறவில்லை. சமூகநீதிக்கு எதிரான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணிதான் என்றாலும் ஒப்பந்தக் காலம் நீட்டிக்கப்படலாம். மாதம் ரூ. 1.50 லட்சம் என்பது தமிழக அரசின் துணைச் செயலா் நிலையிலான பணிக்கான ஊதியம் ஆகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியிடத்தை இட ஒதுக்கீடு இல்லாமல், போட்டித் தோ்வு இல்லாமல் நிரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல், போதையில்லா தமிழ்நாடு இயக்கத்துக்கு வல்லுநா்கள் நியமிப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.