பென்னாகரம்: தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஃபென்ஜால் புயல் காரணமாக பெய்து வந்த மழையினால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 21,000 கன அடியாக அதிகரித்துள்ளது.இதனால் அருவிகளில் குளிப்பதற்கும்,காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை,ராசிமணல், மொசல் மடிவு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக ஃபென்ஜால் புயலினால் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில், காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கன அடியாக இருந்தது. தொடர் மழையினால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 14,000 கன அடியாகவும், அதனைத் தொடர்ந்து 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 21,000 கன அடி, 9.30 மணி நிலவரப்படி விநாடிக்கு 23,000 கன அடியாக படிப்படியாக அதிகரித்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவார் பானி, சினி அருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அங்குள்ள அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிக தடை விதித்துள்ளார்.
தடை உத்தரவின் பெயரில் பிரதான அருவி செல்லும் நடைபாதை, சின்னாறு பரிசல் துறை ஆகியவை பூட்டப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புயல் காரணமாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நீர்வரத்தின் அளவை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.