மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.!
கடந்த 24 மணி நேரத்தில் மேட்டூரில் 26.8 மி.மீ. மழை பதிவு...
கு. இராசசேகரன்
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் புயல் காரணமாக கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன் தினம் காலை விநாடிக்கு 5,195 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, நேற்று(டிச. 2) காலை விநாடிக்கு 7,414 கன அடியாகவும், இன்று(டிச. 3) காலை விநாடிக்கு 9,246 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 110.93 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று(டிச. 3) காலை 111.39 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 0.46அடி உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 80.40 டி.எம்.சியாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேட்டூரில் 26.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.