குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி நோக்கி விவசாயிகள் இன்று பேரணியாகச் செல்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா எல்லையில் ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். தில்லி செல்ல முற்பட்ட அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர்.
தில்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று ஹரியாணா மாநிலம் அம்பாலா பகுதியில் உள்ள சம்பு எல்லையில் இருந்து தில்லி நோக்கி இன்று பிற்பகல் 1 மணியளவில் பேரணி நடத்தவுள்ளனர்.
விவசாயிகள் பேரணி அறிவிப்பையடுத்து தில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தில்லி எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. ஹரியாணா, பஞ்சாப் எல்லைகளிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் தில்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
வேளாண் சட்டங்கள்
கடந்த 2020ல் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தில்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021ல் 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும் இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை.
இதனை வலியுறுத்தியே விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்குகின்றனர். தில்லியிலே முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடரவிருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.