இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகே சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் பகுதியிலிருந்து சுமார் 324 இயந்திரப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக நேற்று (டிச. 7) கடலுக்குள் சென்றனர். இவர்களில் சிலர் இலங்கையின் கடல் பரப்புக்குள் சென்று மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 2 இயந்திரப் படகுகளையும், 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் படகுகள் உள்பட 8 பேரும் கங்கேசாந்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு யாழ்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மண்டபம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சகாய ஆண்ட்ரூ ஆகியோருடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் மண்டபம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 45 முதல் 60 வயதுகுட்பட்டவர்கள். அவர்களின் விவரங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிச.5 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை விடுவிக்கக் கோரி நேற்று மீனவர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படையால் இந்த ஆண்டில் மட்டும் 537 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 70 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.