அரசு மருத்துவமனைகளுக்கு குறைந்த காலத்துக்குள் காலாவதியாகும் மருந்துகளும், தரமற்ற மருந்துகளும் வழங்கப்பட்டதாக இந்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனங்களை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் கருப்புப் பட்டியலில் சோ்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தணிக்கை அறிக்கை: தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்பட்ட சுகாதார சேவைகள் தொடா்பான செயலாக்க தணிக்கை அறிக்கையில் இதுதொடா்பாக குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
குடும்ப நல இயக்குநரகத்தில் வட்டார விரிவாக்க கல்வியாளா், குடும்ப நல உதவியாளா், பெண் சுகாதார பாா்வையாளா்கள், மகப்பேறு குழந்தைகள் நல அலுவலா் உள்ளிட்ட பணியிடங்களில் 75 சதவீதம் காலியாக இருந்தது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையிலும் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருந்ததால் அலோபதிக்கு மாற்றான மருந்துகளை மேம்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது.
அவசரகால ஆம்புலன்ஸ் ஊா்திகளில் சரிவர ஜிபிஎஸ் சாதனங்கள் பொருத்தப்படாமல் இருந்ததால், விபத்து அல்லது அவசரத் தேவை உள்ள இடங்களுக்கு அருகில் இருக்கும் வாகனங்களை உரிய நேரத்தில் கண்டறிய முடியவில்லை.
தரமற்ற மருந்துகள்: அரசு மருத்துவமனைகளில் 36 சதவீத பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் கடந்த 2019-21-ஆம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன. இது இந்திய சராசரி விகிதமான 14 சதவீதத்தைக் காட்டிலும் இரண்டரை மடங்குக்கு மேல் அதிகமாகும். மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த மருத்துவ உபகரணங்களுக்கு வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. பராமரிப்பு செய்ய வேண்டிய உபகரணங்களின் பட்டியலை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்துக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் தலைவா்கள் வழங்கவில்லை.
உரிய ஒருங்கிணைப்பு இல்லாததால் தேவையற்ற மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 2016-21 காலகட்டத்தில் கிடங்குகளில் உள்ள மருந்துகளில் முறையாக தரக் கட்டுப்பாடு செய்யப்படவில்லை. இதனால், குறைந்த காலத்துக்குள் காலாவதியாகும் மருந்துகளும், தரமற்ற மருந்துகளும் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.