கடத்திவரப்பட்ட உயர்ரக கஞ்சா: காட்டிக்கொடுத்த மோப்ப நாய்!
சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட உயர்ரக கஞ்சாவைக் காட்டிக்கொடுத்த மோப்ப நாய்!
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.7.6 கோடி மதிப்புடைய 7.6 கிலோ உயர்ரக கஞ்சா போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
பயணிகளை மோப்ப நாய் உதவியோடு காவல்துறையினர் சோதனை செய்துகொண்டிருந்த போது கஞ்சாவை மறைத்து வைத்திருந்த பெட்டியைப் பார்த்ததும் அங்கேயே அமர்ந்துகொண்டு தரையை தோண்டுவது போல செய்து காவல்துறையினருக்குக் காட்டிக்கொடுத்தது.
உடனடியாக பெட்டியை திறந்து, போதை பொருளை கண்டுபிடித்து பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement
Advertisement
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானத்தில், பெருமளவு போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதோடு போதை பொருளை கண்டுபிடிப்பதற்கான, நிபுணத்துவம் வாய்ந்த மோப்ப நாயையும், இந்த சோதனைக்கு பயன்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாங்காக்கில் இருந்து, சென்னை வந்த தனியார் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா பயணியாக போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் கொண்டு வந்த அட்டைப் பெட்டிகளை, மோப்பம் பிடித்த சுங்கத்துறை மோப்பநாய், உடனடியாக அதே இடத்தில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்களால் தரைய கீறி சைகை காட்டியது.
சுங்க அதிகாரிகள் அட்டைப்பெட்டிகளை திறந்துப்பார்த்து சோதனை செய்தனர். அதில், பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அட்டைப் பெட்டிகளில் 7.6 கிலோ உயர் ரக கஞ்சா போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 7.6 கோடி. இதை அடுத்து போதைப் பொருள் கடத்திய பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து, போதைப் பொருளையும் பறிமுதல் செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.