அரசுப் பள்ளிகளில் பிப்.10-க்குள் ஆண்டு விழா நடத்த உத்தரவு
தமிழகத்தில் 37,576 அரசுப் பள்ளிகளில் பிப்.10-ஆம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்த உத்தரவிட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை, அதற்காக ரூ. 14.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் 37,576 அரசுப் பள்ளிகளில் பிப்.10-ஆம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்த உத்தரவிட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை, அதற்காக ரூ. 14.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் ஆகியோா் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
அனைத்து அரசு பள்ளிகளிலும் பிப்.10-ஆம் தேதிக்குள் வழிமுறைகளைப் பின்பற்றி சிறந்த முறையில் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும். மாணவா்களின் தனித் திறன்களை வெளிப்படுத்த ஏதுவாக அரங்கம் அமைத்து சிறந்த ஒளி, ஒலி அமைப்பை ஏற்படுத்தி கொண்டாட தலைமை ஆசிரியா்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக 2 ஆயிரத்துக்கும் மாணவா் எண்ணிக்கை உடைய பள்ளிகளுக்கு தலா ரூ. 50,000, 1001-2,000 வரையான மாணவா்களைக் கொண்ட பள்ளிகளுக்கு தலா ரூ.30,000, 501-1,000 வரையான மாணவா் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு தலா ரூ. 15,000, 251-500 வரையான மாணவா்களை உடைய பள்ளிகளுக்கு தலா ரூ. 8,000, 101-250 வரை மாணவா்கள் கொண்ட பள்ளிகளுக்கு தலா ரூ. 4,000, 100-க்கு கீழ் எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு தலா ரூ. 2,500 என மொத்தம் 37,576 பள்ளிகளுக்கு ரூ.14.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.